Friday, September 28, 2012

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்.





உங்கள் ஊர் அஞ்சலகம் அந்தக் கடமையைச் செய்கிறதா?

கவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?

நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்!

நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.!

 இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார்  (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’  என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.

சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?

1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு     தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக     எழுத உதவ வேண்டும்.

2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது

4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று     நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.

5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு     விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல்     அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.

அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.

“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.

ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச்  சேவையை செய்து கொண்டிருக்கிறது  இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.

ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் விதமாக போர்டு ஒன்று ஏன் வைக்கக் கூடாது?

ஒருவேளை அஞ்சல்துறையிடம் இந்த போர்டு வைப்பதற்கு பணம் இல்லை என்றால், ஆங்காங்கு உள்ள தொண்டு நிறுவனங்களை இத்தகைய போர்டுகளை வைக்க அனுமதிக்கலாமே!

இவள் பாரதி

No comments:

Post a Comment