Tuesday, April 2, 2013

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி தகவல்களை அறிவதில் சிக்கல்கள் இருந்தது. இதனைக் களையும் வகையில் இந்திய தபால், தந்தித் துறை புதிய வழிமுறைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை ஒருவர் அறிய விரும்பினால், 10 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை பணமாகவோ, காசோலையாகவோ அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமோ செலுத்தலாம்.

ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நேரில் பணமாக செலுத்த இயலாது. வெளி நாடுகளில் இந்திய பணம் 10 ரூபாய்க்கு காசோலை, கேட்பு வரைவோலையோ பெற முடியாது. இதனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவது இயலாததாக இருந்தது.

இதனை சரி செய்ய இந்திய தபால், தந்தி துறை, தனது இணையத் தளத்தில் புதிய 'இணைய தபால் நிலையத்தை' அறிமுகப்படுத்தி உள்ளது.

வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் இந்த இணையத் தளத்தில் உள்ள இணைய தபால் நிலையம் (இ-போஸ்ட் ஆபீஸ்) என்ற இணைப்புக்குள் சென்று, தங்களது பெயர்களை நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இணைய தபால் ஆணையை ( இ- போஸ்டல் ஆர்டர்) பெறலாம். இதற்கு பிரத்தியேகமான எண்கள் வழங்கப்படும். இந்த எண்களை தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். 

இந்த வசதிகளால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

No comments:

Post a Comment