Tuesday, April 20, 2010

அரசாங்கத்தில் உங்கள் வேலை நடக்க வேண்டுமா

கேளுங்கள் கொடுக்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த மக்களின் எந்த சந்தேகங்களுக்கும் அரசு அலுவலகங்கள் பதில் தருவதைக் கட்டாயமாக்கும் தகவல் உரிமைச்சட்டம் 2005ல் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தச் சட்டத்துக்குக் கிடைத்து வருகிற வரவேற்பு அமோகம்.

தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்களின் அனுபவங்களைக்கேட்டால், அந்தச் சட்டத்தின் வலிமை தெளிவாகப் புரியும். சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பாத்திர வியாபாரி சங்கர். இவருடைய ரேஷன்கார்டு ஐந்து வருடங்களுக்கு முன்னால் காணாமல் போனது.
""மாசந்தோறும் ராயபுரம் குடிமைப் பொருள் வழங்கல் மண்டல அலுவலகத்துக்குப் போய் நான் புது ரேஷன் கார்டு கேட்குறதும் அங்குள்ள ஊழியர்கள் பொறுப்பு இல்லாம பதில் சொல்றதுமா அஞ்சு வருஷம் போயிடுச்சு. வெறுத்துப்போயிட்டேன். தற்செயலா தகவல் உரிமைச்சட்டத்தைப் பற்றி ஒரு அமைப்பு மூலமா தெரிய வந்துச்சு. ரேஷன் கார்டு ஏன் கொடுக்கலை. என்ன சான்றுகளை எதிர்பார்க்குறீங்க, ரேஷன்கார்டு கேட்குறவருக்கு விதிமுறைப்படி எத்தனை நாளுக்குள்ள கொடுக்கணும்னு பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுதி, ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக்கடிதத்துக்கு அவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. "ரேஷன்கார்டு ரெடி'னு பதறியடிச்சுட்டு எனக்குத் தகவல்வந்துச்சு. சிவில் சப்ளைஸ் ஆஃபிசில் வழக்கமா அலட்சியமா பதில் சொல்லிட்டிருந்த ஊழியர்கள் எல்லாம் ரொம்ப மரியாதையா என்னை உட்கார வச்சுப் பேசுனாங்க. அஞ்சு வருஷமா எனக்குக் கிடைக்காத ரேஷன் கார்டு ஒரே வாரத்துல கிடைச்சது'' என்று இன்னும் அந்த ஆச்சர்யம் விலகாமல் சொல்கிறார் சங்கர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் .டி.ஊழியர் பிரசன்னா தனது பெற்றோரின் பாஸ்போர்ட்டுக்காகப் போராடிய அனுபவம் இது. ""பாஸ்போர்ட் கேட்குறவங்களோட முகவரியை போலீஸ் நேரில் சரிபார்த்து பாஸ்போர்ட் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பணும். எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் தேவையில்லாத டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட கேட்டாங்க. என்னோட வயசான அம்மா, அப்பாவை ஸ்டேஷனுக்கு அடிக்கடி வரவழைச்சு அலையவிட்டாங்க. விதிமுறைப்படி தேவையான சான்றுகளா நான் காட்டினதை எல்லாம் கண்டுக்காம, "அந்த முகவரியில் யாரும் அப்படி வசிக்கலை'னு பாஸ்போர்ட் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டாங்க. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கெல்லாம் தெளிவான விளக்கம கேட்டு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கமிஷனர் ஆபீசுக்கு கடிதம் அனுப்பினேன். ரெண்டே நாளில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பாஸ்போர்ட் ஆபீசுக்கு அட்ரஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் அனுப்பிட்டாங்க'' என்கிறார் பிரசன்னா. தகவல் உரிமைச் சட்டத்தின் 7(1) பிரிவின்பிடி தகவல் கேட்டதால் வழக்கத்தைவிட அதிரடியாக இவரது வேலை நடந்திருக்கிறது. விண்ணப்பதாரரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதகம் ஏற்படும் சூழ்நிலை எனில் 48 மணி நேரங்களுக்குள் தகவல் தர வேண்டும் என்பது இந்தப் பிரிவின் அடிப்படை விதி.

பல்லாவரம் அருகே உள்ளே ஒரு ஊரில் பல வருடங்களாக கவனிக்கப்படாமல் கிடந்த தங்களது தெருவுக்காக தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தியவர் கல்லூரிப் பேராசிரியர் லூர்து சின்னப்பன். ""எங்க தெருவுக்கு ஏன் ரோடு போடலைனு கேட்டு ஊராட்சியின் நிர்வாக அதிகாரிக்கு மனுபோட்டேன். என்னோட கேள்விகளுக்கு அவங்களால் பதில் தர முடியலை. ஆனா சில நாட்களிலேயே ரோடு போடுறதுக்கு சர்வே பண்ண ஆள் வந்துட்டாங்க. சுமாரானரோடாக இருந்தாலும், இப்போ சிரமம் இல்லாம நடமாட முடியுது'' என்று நிறைவாகச் சொல்கிற சின்னப்பன் தகவல் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியிடம் கேட்டபோது,""மின் இணைப்பு கொடுக்குறதுக்காக மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட தொகையை "டெபாசிட்'டாக வசூலிக்குது. அந்த டெபாசிட்டை எல்லாம் என்ன பண்றீங்கனு ஆர்.டி.. மூலமா ஒரு மனு போட்டுக் கேட்டேன். ஒவ்வொரு கன்ஸ்யூமரோட டெபாசிட்டுக்கும் ஆறு சதவீத வட்டி போட்டு அவங்க அக்கவுண்ட்ல சேர்த்துருவோம்னு மின்சார வாரியத்துலேர்ந்து பதில் வந்தது. ஒருத்தர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செஞ்சா, எதிர் மனுதாரர் சொல்ற பதிலை அவர் எழுத்துப்பூர்வமா பார்க்க முடியாது. நீதிமன்ற விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாம கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தித்தான் பல வழக்குகளில் எதிர்மனுதாரர்களின் ஸ்டேட்மென்ட்டை போலீசிடமிருந்து வாங்க முடியுது'' என்று பல உதாரணங்களைச் சொல்லி பிரமிப்பூட்டுகிறார்.

சமீபத்தில் தகவல் உரிமைச்சட்டத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த மத்திய அரசு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அந்தச் சட்டத்தின் கூர்மையை மழுங்கடிக்கும் முயற்சிதான் என்கிறார்கள் சிலர்.

""தற்போது நடைமுறையில் இருக்குற தகவல் உரிமைச்சட்டத்திலேயே பல குறைகள் இருக்கு. உதாரணமா, உதவி தாசில்தாரிடம் தகவல் கேட்கிற மனுவுக்கு பதில் கிடைக்கலைனா, நாம அவருக்கு மேலே இருக்குற தாசில்தாரிடம் தான் மேல் முறையீடு பண்ணணும். தனக்கு ஆதரவா செயல்பட்ட உதவி தாசில்தாருக்கு எதிரா தாசில்தார் எப்படி நடவடிக்கை எடுப்பார்? ஒரே மனுவிலேய தகவல் கிடைக்குறதை அரசு கட்டாயமாக்கணும். தகவல் கொடுக்கறதுக்கான 30 நாள் கால அவகாசத்தையும் குறைக்கணும். அதையெல்லாம் செய்யாம புது திருத்தங்களைப் பற்றி அதிகாரிகள் பேசுறது தேவையில்லாத வேலை''

ஆனந்த் செல்லையா