Tuesday, December 18, 2012

சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை

இந்தியாவில், சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை; அதற்கு எடுத்துக்காட்டு, திருவண்ணாமலையில், சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது என, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பலர், வேதனை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில், சமூக சேவகரான ராஜ்மோகன், கடந்த 2ம் தேதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பொதுநல ஆர்வலர் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பல்வேறு முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தவரான, ஆவடி தரணிதரன் கூறுகையில், ""ராஜ்மோகன் படுகொலை செய்யப்பட்டது, இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. இச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தை சீர் குலைப்பதற்கு தொடர்ந்து சதி நடந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.

தொடரும் உயிர் பலி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, இன்று வரை, 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பல்வேறு கேள்விகள் கேட்டதால், 

கடுமையாக தாக்கப்பட்டவரான சந்தானம் கூறியதாவது: இந்தியாவில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே, தகவல் அறியும் ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது, அரசின் கடமை. அரசு கொடுத்த உரிமையை, நாங்கள் பயன்படுத்துகிறோம். அது, தவறு செய்கிறவர்களுக்கு பாதகமாக அமைந்தால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவில், அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் நம்ப முடியாது. துப்பாக்கியின் இரண்டு குழல்கள் அவர்கள். எனவே, பொதுமக்களுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்களை, பொதுமக்களே பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரண நிதி: பாதுகாப்பு வழங்குவது குறித்து, பல்வேறு ஆர்வலர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த அச்சுறுத்தல் வந்தாலும், இதுகுறித்து தீவிர விசாரணை வேண்டும். குறிப்பாக, அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தகவல் கேட்பவரால் யாரெல்லாம் பாதிப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டும். சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகன் குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க வேண்டும்; தனிமையில் இருக்கும் அவருடைய மனைவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தகவல் அறியும் ஆர்வலர் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

ஆமதாபாத்: குஜராத்தில் தகவல் அறியும் ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்ஜேத்வா. தகவல் அறியும் உரிசை சட்ட ஆர்வலர், இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத், செளராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள ஆசிய சிங்கங்கங்களின் சரணாலயமான கிர் காடுகளில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடந்து வருவதாகவும், இதில் அம்மாநில பா.ஜ. எம்.பி. டினு சோலங்கி என்பவருக்கும் தொடர்பிருப்பதாகவும்,இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு தொடர்ந்த சில நாட்களில் (ஜூலை 20-ம் தேதி 2010) அவர் ஐகோர்ட் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் எம்.பி. உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பா.ஜ. எம்.பி. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் அமித் ஜேத்வா தந்தை தனக்கு நியாயம் கிடைக்க கோரி ஆமதாபாத் ஐகோர்ட்டில் அமித்ஜேத்வா கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க‌ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,. மனு ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Monday, December 17, 2012

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து "சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை, குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது. 

இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல் ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், "எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.

ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.
ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிக ளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியதுபோல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.